நீ மௌனிக்கிறாய்
நான் மரணிக்கிறேன்...
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை
உன்னால் உயிர்த்த என் வாலிபம்
உன்னாலேயே
உதிர்ந்துவிடப் போவதிலும்
உனக்கு திருப்தி என்றால்
நீ
உதிர்த்து விட்டே போகலாம்
ஒரு பூந்தோட்டத்திற்காய்
தவமிருந்தேன் உன்னில் !
நீயோ
எறிந்து விட்டுப் போனது
கருகி விழுந்த சருகுகள்தான்
என் வினாக்களுக்கெல்லாம் பதில்கள் மௌனமா ?
சம்மத்த்தின் குறியீடு
மௌனங்கள் மட்டும் தானா ?
ஆயின்
உன் சம்மதங்கள் எனக்கு
தேவையில்லை இப்போது
வார்த்தைகளை நீ
எங்கேயடி தொலைத்தாய் ?
ஊமை பாஷையிலாவது
உன்னால்
உரையாட முடியாதா ?
என் அவஸ்தை சொல்லி
நான் அழுவதென்றால்
உன் விழிகளைக் கொஞ்சம்
கடனாகத் தா !
என் கனவுகளிலாவது
நீ புன்னகைத்துப் போயிருந்தால்
என் கவிதையில்
இத்தனை சோகங்கள்
இருந்திருக்க நியாயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக